Tuesday, November 29, 2011
பணம் தரும் பதிகம்
["நல்ல வண்ணம் வாழலாம்" என்கிற தலைப்பில் உரையாடும் போது திருமதி இளம்பிறை மணிமாறன் அவர்கள் கூறியது - ]
34. இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை ஆளுமாறு ஈவதொன்றுஎமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.
தெளிவுரை : பாற்கடலின்கண், அமுதத்தை கடைந்தெடுக்கும்போது தோன்றிய நஞ்சினை மிடற்றினில் அடக்கி வைத்துக் காத்தருளிய வேத நாயகனே ! முனைந்து ஆற்றும் செயலில், இடையூறு தோன்றித் துன்பம் நேர்ந்தாலும்; மனம் தடுமாற்றம் கொண்டு அத்தகைய செயலை மேவுதற்குத் தளர்ச்சியுற்றாலும்; எனது தீவினைப் பயன் காரணமாக, இன்னலும் பிணியும் தொடர்ந்து வந்தாலும் நான், உன்னுடைய திருக்கழலைக் தொழுது வணங்குபவன். அவ்வாறு உள்ள தன்மையில், எம்மை ஆட்கொள்ளும் தகைமை இதுவோ ! எமக்குத் தேவைப்படுகின்ற பொருளைத் தந்து அருள்புரியவில்லையானால், அது உமது திருவருளுக்கு அழகு ஆகுமா ! ஆவடுதுறையில் வீற்றிருக்கும் அரனே ! அருள்புரிவீராக.
35. வாழினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.
தெளிவுரை : இம்மையில், மண்ணுலகத்தின் நன்மைகளை நுகர்ந்து மகிழ்கின்ற காலங்களிலும், மண்ணுலகத்திலிருந்து விடுபட்டுச் சாயும் தன்மையால் மடியும் காலத்திலும், தீவினைப் பயனால் வருந்தித் துன்புறும் காலத்திலும், மனம் போன போக்கில் சென்று, நற்பாதையிலிருந்து விலகிப் பாவக்குழியில் வீழ்கின்ற காலத்திலும், ஒளிமிக்க செஞ்சடையில் கங்கை திகழப் பிறைமதியைத் தரித்து விளங்கும் புண்ணியனே ! நான் உன்னுடைய திருவடியைப் பற்றி இருப்பவனே அன்றி, நின்னை மறப்பவன் அல்லன். ஆவடுதுறையுள் மேவும் அரனே ! எம்மை ஆட்கொண்டு விளங்கும் நீவிர் அருள்புரியும் பாங்கு தான் இதுவோ ! எமக்குத் தந்தருள்வது ஒன்று இல்லையெனில், அதுவோ உனது இனிய அருள் தன்மைக்குப் பொருத்தம் உடையது ! உனது இனிய அருளின் தன்மையானது அடியவர்களுக்கு வேண்டியவற்றை நன்கு ஈவது அல்லவா !
36. நனவினும் கனவினும் நம்பாஉன்னை
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே
இதுவோஎமை ஆளுமாறு ஈவதொன்றுஎமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.
தெளிவுரை : கங்கையும், மணம் கமழும் கொன்றை மலரும் தரித்துக் கனன்று எரியும் நெருப்பைக் கையில் கொண்டு விளங்கும் ஈசனே ! ஆவடுதுறையின் அரனே ! நனவின்கண்ணும், கனவின்கண்ணும் உன்னுடைய நம்பிக்கைக்கு உகந்த திருநாமத்தை மனம் ஒன்றி வணங்குவதற்கு மறந்திலேன். எனக்குத் தாய்போன்று அன்பு செலுத்தும் பெருமையுடைய ஈசனே ! நமக்கு வேண்டிய பொருளைத் தராமல் இருப்பது உனது இனிய அருள் தன்மைக்குப் பொருந்துமாறு ஆகாது.
37. தும்மலொடு அருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாது என்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணைஒன்றினால்
மும்மதிள் எரிஎழ முனிந்தவனே
இதுவோஎமை யாளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.
தெளிவுரை : மேரு மலையை வில்லாகக் கொண்டு, அக்கினியைக் கணையாகத் தொடுத்துத் தீயனவாகிய முப்புரங்களை எரியுமாறு செய்த பரமனே ! ஆவடுதுறையில் மேவும் அரனே ! தேகத்தில் தோன்றும் பிணிவகையான தும்மல் போன்ற துயர் வந்துற்ற காலத்திலும், அவற்றின் உபாதைகளால் நலிவுற்ற போதும், சித்தம் கலங்காமல், உனது திருநாமத்தை எனது நாவானது நவிலும் தன்மையுடையது. அங்ஙனம் இருக்க எனக்கு அருள் புரியாது வாளா இருத்தல், உனது இனிய அருள் தன்மையின் மேன்மைக்குச் சிறப்பு ஆகுமோ ! எம்மை ஆட்கொள்ளும் பரிசு இத்தன்மையதோ !
38. கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
கைமயணி மிடறுடை மறையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவா உனது இன்னருள் ஆவடு துறை அரனே.
தெளிவுரை : கொய்து அணியப் பெறும் நறுமணம் கமழும் மலர்களை, மகிழ்ந்து சடைமுடியில் சூடிய நீல கண்டத்தையுடைய மறையவனே ! ஆவடுதுறையில் மேவும் அரனே ! கையில் உள்ள பொருள்கள் யாவும் இழந்து நைந்த காலத்திலும், பிறரால் இழிவாகக் கருதப்பட்டுக் கழிவுப் பொருளைப் போன்று குறைவுற்ற போதும், செம்மை விளங்கும் உமது திருவடியை அன்றி யான் சிந்தனை செய்ததில்லை. அங்ஙனமிருக்க, எமக்கு அருள்புரிந்து ஈவது ஒன்று இல்லை என்றால், அதுவோ உமது இனிய அருளுக்கு அழகாவது ! எம்மை ஆண்டு அருள் புரிவதும் இத்தன்மைத்தோ !
39. வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய்உன் அடியலால் ஏத்தாதுஎன்நா
ஐந்தலை அரவுகொண்டு அரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோஎமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.
தெளிவுரை : ஐந்து தலைகளையுடைய அரவத்தை அரையில் கட்டி, நறுமணம் கமழும் திருவெண்ணீற்றினைத் திருமேனியில் அணிந்து மேவும் சங்கரனே ! ஆவடுதுறையில் திகழும் அரனே ! கொடிய துன்பத்தால் அச்சம் கொண்டுற்றாலும், எம் தந்தையே ! உன் திருப்பெயரை அன்றி என்னுடைய நாவானது வேறு ஒன்றைச் சொல்லாது. அங்ஙனம் இருக்க, எமக்கு வேண்டியவற்றைத் தந்தருளாத பாங்கு, உனது இனிய அருட்குணத்திற்கு நன்றாகுமோ ! எம்மை ஆட்கொண்டு அருளும் பாங்கும் இதுவோ ! அருள் புரிவீராக.
40. வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாஉன் அடியலால் அரற்றாது என்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழல்எழ விழித்தவனே
இதுவோஎமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.
தெளிவுரை : தனக்கு ஒப்புமையாகத் தன்னையே அன்றிப் பிறரைச் சொல்லுதற்கு இல்லாத சிறப்புக் கொண்ட மன்மதனை, அவனுடைய வடிவமானது அழியுமாறு விழித்து நோக்கி எரித்த ஈசனே ! ஆவடுதுறையில் மேவும் அரனே ! அப்பா ! வெம்மை கலந்து தோன்றித் தாக்குகின்ற கொடிய வினையானது பற்றித் தாக்கினாலும், உன் திருநாமத்தை அன்றி என்னுடைய நாவானது வேறொன்றைச் சொல்லாது. அங்ஙனமிருக்க, எமக்குத் தந்தருள்வது ஒன்றும் இல்லையெனில் உமது இனிய அருட்குணத்திற்கு அதுவோ இயல்பு ! எம்மை ஆட்கொண்டு அருள் புரியும் பெற்றியும் இதுதானோ !
41. பேரிடர் பெருகிஓர் பிணிவரினும்
சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி இராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே
இதுவோஎமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.
தெளிவுரை : பெருமையுடைய முடிவேந்தனாகிய இராவணனைக் கயிலை மலையின்கீழ் இருந்து துன்புற்று நலியுமாறு செய்த பெருமானே ! ஆவடுதுறையுள் மேவும் அரனே ! தீவினையின் வயத்தால் பெருந்துன்பமும், தேகத்தின் பிணியும் முன்னுற்று வருத்தினாலும், புகழ் மிக்கதாகவும் நன்மையே வழங்குவதாகவும் உள்ள உமது திருவடியை அல்லாது வேறு எதனையும் நான் சிந்தித்தது இல்லை. அங்ஙனம் இருக்க, எமக்கு எந்த ஒன்றையும் தரவில்லையாயின் அதுவோ உமது இனிய அருட் குணத்திற்கு ஒப்பது ! எம்மை ஆட்கொண்டு அருளும் பாங்கும் இதுவோ !
42. உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோஎமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.
தெளிவுரை : திருமாலும், பிரமனும் அளப்பதற்கு அரிய ஈசனே ! சுவை கொண்டு உணவு கொள்கின்ற நிலையிலும் அதன் கனவுத் தன்மையில் வயப்படாமலும், பசியின் களைப்பில் ஆழ்ந்திருப்பினும், அதன் சோர்வால் மெலியுறாதும், தன்னிலை மறந்து உறங்கும் காலத்திலும் அந்தராத்மாவை வெறுமனே உறங்கச் செய்யாது ஒளிமிக்க உனது திருக்கழலை மறவாதும் எமக்கு ஈந்தருள்வது ஒன்றும் இல்லையேல் அதுவோ உனது இனிய அருட் குணத்திற்கு உரியது ! எம்மை ஆட்கொண்டு அருள்கின்ற வழியும் இதுவோ !
43. பித்தொடு மயங்கியொர் பிணிவரினும்
அத்தாஉன் னடியலால் அரற்றாதுஎன்நாப்
புத்தரும் சமணரும் புறன் உரைக்கப்
பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே
இதுவோஎமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.
தெளிவுரை : புத்தரும் சமணரும் புறம்பான உரைகளை நவின்றாலும், அவற்றை ஒரு பொருட்டாகக் கருதாமல், நின்னை வணங்குகின்ற பக்தர்களுக்கு வேண்டிய அனைத்தும் வழங்குகின்ற மாண்புடைய நாதனே ! ஆவடுதுறையில் மேவும் அரனே ! பித்தம் முதலான பிணிகளால் மயங்கும் நிலையுற்றாலும், உன்னுடைய திருநாமத்தை அல்லாது எனது நாவானது பிறவற்றைப் பேசாது. அங்ஙனம் இருக்க, அத்தனே ! எமக்கு ஈந்தருள்வது யாதொன்றும் இல்லையேல், அதுவோ உனது இனிய அருள் குணத்திற்கு அழகாவது ? எம்மை ஆட்கொள்ளும் வழியும் இதுவோ !
44. அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த
இலைநுனை வேற்படை எம்இறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயின நீங்கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாக முன்னேறுவர் நிலமிசை நிலையிலரே.
தெளிவுரை : அலைகள் பெருகும் நீர் வளம் பொருந்திய ஆவடுதுறையில் வீற்றிருக்கும் சூலப்படையுடைய எம் ஈசனை, உலக நலன்களை விரும்பிய ஞானசம்பந்தர் மொழிந்த பெருமையுடைய தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள், வினை யாவும் நீங்கப் பெற்றவராய், விண்ணவர்தம் மேலான உலகத்தினை நோக்கிச் செல்பவர்கள் ஆவார்கள். கர்ம பூமியாகிய இம்மண்ணுலகில் மீளவும் பிறவியை அடையாது செம்மையுறுவார்கள்.
Subscribe to:
Posts (Atom)